ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

நகர்ப்புறங்களில் அதிக கட்டுபடி விலை வீடுகள்- பி.கே.என்.எஸ். நிர்மாணிக்கும்

ஷா ஆலம், அக் 4- நகர்ப்புறங்களில் அதிகளவிலான கட்டுபடி விலை வீடுகளை எதிர்காலத்தில் நிர்மாணிக்க சிலாங்கூர்  மாநில மேம்பாட்டுக கழகம் (பி.கே.என்.எஸ்.)  திட்டமிட்டுள்ளது.

புறநகர்ப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் அடிப்படை வசதி உள்ள பகுதிகளுக்கு அருகில் குடியிருப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமது அப்பாஸ் கூறினார்.

கட்டுபடி விலையிலான வீடுகளை உட்புறப் பகுதிகளில் நிர்மாணித்தால்  பொதுமக்கள் அங்கு குடியிருக்க முன்வரமாட்டார்கள் என்பதோடு இதனால் வீண் விரயமும் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

ஆகவே, அதிகமான வீடுகளை எல்.ஆர்.டி. நிலையங்கள் மற்றும் கடைத் தொகுதிகளுக்கு அருகில் பி.கே.என்.எஸ். நிர்மாணிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதன் மூலம் குடியிருப்பாளர்கள் வணிகம் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

இன்று காலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அலுவலகத்தில் உயர்நெறி மற்றும் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எந்த இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற கேள்விக்கு பொருத்தமான மற்றும் வீடுகளுக்கான தேவை அதிகம் உள்ள இடங்களில் அத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

தேவை இருக்கும் பட்சத்தில் ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயாவில் வீடுகளை நிர்மாணிப்போம். எனினும் அங்கு நமக்கு நிலங்கள் இல்லை. எனினும், கூட்டு முயற்சியில் இத்தகைய திட்டங்களை அமல்படுத்ததும் சாத்தியத்தை ஆராயவிருக்கிறோம் என்றார் அவர்.

 


Pengarang :