ஷா ஆலம், அக் 9- சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் வரும் 13ஆம் தேதி புதன் கிழமை தொடங்கி பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வரும் 14ஆம் தேதி மாலை 5.00 மணி தொடங்கி நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக 998 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்டாலிங், கோலாலம்பூர், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு சிலாங்கூர், கோல லங்காட், கோல சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் 13 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் நீர் விநியோகம் தடைபடும்.
நீர் அழுத்தத்தின் அளவு மற்றும் தொலைவு ஆகியவற்றைப் பொறுத்து நீர் விநியோக நேரம் மாறுபடும் என்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியுள்ளது.
வரும் 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ள 105 லோரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, 18 பொது குழாய்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர் டிவிட்டர், இண்ட்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை நாடலாம்.