தஞ்சோங் காராங், அக் 19- ஆறு மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவையை வழங்கக்கூடிய சிம் கார்டுகள் இவ்வாரம் தொடங்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்த இணையத் தரவு திட்டத்தின் கீழ் ஆயிரம் விவசாயிகள் மாதம் 45 கிகாபைட் இணைய தரவு சேவையை இவ்வாரம் முதல் பெறுவர் என்று விவசாயம் மற்றும் விவசாய அடிப்படைத் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
விவசாயிகளுக்காக நாங்கள் 2,000 சிம் கார்டுகளை ஒதுக்கியுள்ளோம். எனினும் 1,000 பேர்தான் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த திட்டம் விவசாயிகளுக்கு மட்டுமானது என்று மற்றவர்கள் நினைத்திருக்கக்கூடும். உண்மையில் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடை வளர்ப்போர் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அவர் சொன்னார்.
எனினும், அதிகமான விண்ணப்பங்கள் சிலாங்கூரின் வட பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து வந்துள்ளன. எஞ்சியுள்ள விவசாயிகளுக்கான இணைய தரவு கோட்டாவை இதர பிரிவுகளுக்கு வழங்கவுள்ளோம் என்றார் அவர்.
தாமான் ஸ்ரீ செத்தியா மண்டபத்தில் சமூக வேளாண் திட்ட பங்கேற்பாளர்களுக்கு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூரைச் சேர்ந்த 70,000 பேருக்கு 12 மாதங்களுக்கு இலவச இணையச் சேவையை வழங்கும் வசதி கொண்ட சிம் கார்டுகள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.