ஷா ஆலம், அக் 22- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு சுபாங் ஜெயா தொகுதியைச் சேர்ந்த 300 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
தலா 100 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச்சீட்டுகளைப் பெற்றவர்கள் யு.எஸ்.ஜே.1 ஜயண்ட் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சுபாங் ஜெயா தொகுதி உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ கூறினார்.
தீபாவளியைக் கொண்டாடுவதில் ஏற்படும் நிதிச்சுமையை ஓரளவு குறைப்பதில் இந்த பற்றுச் சீட்டுகள் துணை புரியும் எனத் தாம் கருதுவதாக அவர் சொன்னார்.
இந்த பற்றுச் சீட்டை இன்னும் பெறாதவர்கள் சுபாங் ஜெயா தொகுதி அலுவலகத்தின் வாயிலாக அதனைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
இங்குள்ள யு.எஸ்.ஜே. 6இல் சுபாங் ஜெயா தொகுதி சிறு திட்டம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் நலன் மற்றும் சுபிட்சத்தை நீண்டகால அடிப்படையில் பாதுகாக்கும் பொருட்டு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது.
சமயம் சார்ந்த பெருநாள் காலங்களின் போது இத்தகைய உதவிகள் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்படும்.