ஷா ஆலம், நவ 4- ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட தொழிற்சாலையை 14 நாட்களுக்கு மூட செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
பத்து கேவ்ஸ், கம்போங் சுங்கை கெர்தாசில் செயல்பட்டு வந்த டெக்னிக்டேக் செல்விசஸ் என்ற அந்த நிறுவனத்தை இம்மாதம் 1 முதல் 14 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் முகமது ஜின் மசூட் கூறினார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான லார்வாக்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த தொழிற்சாலை மூடப்பட்ட காலக்கட்டத்தில் எங்கள் அதிகாரிகள் தொடர்ச்சியாக அங்கு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருவர். அந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதிப்பதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, செலாயாங் வட்டாரத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1,695 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
செலாயாங் வட்டாரத்தில் டிங்கி பரவல் அபாயம் அதிகம் உள்ள மூன்று பகுதிகள் இக்காலக்கட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.