ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKAN

பி.டி.ஆர்.எஸ். மாணவர்களுக்கு கூடுதலாக 2,500 இலவச சிம் கார்டுகள்

ஷா ஆலம், நவ 13- சிலாங்கூர் அரசு வழங்கும் இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளை  மேலும் அதிகமான சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்ட மாணவர்கள் (பி.டி.ஆர்.எஸ்.) பெறுவர்.

இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் அதிக பயன்பெறுவதை கருத்தில் கொண்டு மற்றத் தரப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த இலவச சிம் கார்டுகளில் ஒரு பகுதியை மாணவர்களுக்கு வழங்கும்படி தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாடுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

தற்போது பி.டி.ஆர்.எஸ். மாணவர்களுக்கு 7,000 சிம் கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறு வணிர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிலிருந்து 2,500 சிம் கார்டுகளை எடுத்து மாணவர்களுக்கு வழங்கவிருக்கிறோம். இதன் வழி இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 9,500 ஆக உயரும் என்றார் அவர்.

மாணவர்களுக்கு மேலும் அதிகமான சிம் கார்டுகளை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அங்காடி வியாபாரிகள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான கோட்டாவை நாங்கள் பயன்படுத்துவதற்குரிய சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவையை வழங்கக்கூடிய 70,000 கைப்பேசி சிம் கார்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.

 


Pengarang :