ஷா ஆலம், நவ 27- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தற்போது 150,000 வெள்ளியாக இருக்கும் வருடாந்திர மானியத்தை அடுத்தாண்டில் 400,000 லட்சம் வெள்ளியாக உயர்த்தும் மாநில அரசின் இம்முடிவு “ஆண்மைத்தனமானது“ என அவர் வர்ணித்தார்.
மத்திய அரசின் கூட்டரசு ஒருங்கிணைப்பு பிரிவிடமிருந்து நாங்கள் 400,000 வெள்ளியைப் பெற்று வருகிறோம், அதே சமயம் மாநில அரசும் எங்களுக்கு 400,000 வெள்ளியை மானியமாக வழங்குகிறது. ஆகவே, நிதி ஒதுக்கீடு தற்போது சமநிலையை எட்டியுள்ளது என்றார் அவர்.
மந்திரி புசார் மாநில சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சபாக் பெர்ணம் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தை தாம் வரவேற்பதாக கூறிய அவர், தேசிய முன்னணி தோல்வி கண்டது முதல் இப்பகுதி பின்தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
இத்தகைய திட்டத்திற்காக நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தோம். இப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்த தற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.