கோலாலம்பூர், நவ 28 - நாட்டில் புதிய கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 5,097 ஆகக் குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 5,501 ஆக இருந்தது. இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து19 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளதாக என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நேற்று முன்தினம் 0.99 இருந்த தேசிய தொற்று விகிதம் (ஆர்.டி.) நேற்று 0.97 ஆக குறைந்துள்ளதாக அவர் கூறினார். புதிய நோய்த் தொற்றுகளில் 5,080 உள்ளூரில் பரவியவையாகும். எஞ்சிய 17 தொற்றுகள் இறக்குமதியானவையாகும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். புதிய சம்பவங்களில் 84 மட்டுமே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்றும் 5,013 சம்பவங்கள் ஒன்று மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று 5,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 22 ஆயிரத்து 045 ஆக உயர்வு கண்டுள்ளது. 423 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் 171 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார். நேற்று மொத்தம் எட்டு புதிய நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இதனுடன் சேர்த்து தொற்று மையங்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/10/KKM-Tan-Sri-Dr-Noor-Hisham-Abdullah-960x644.jpg)