கோல திரங்கானு, நவ 29- உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு நேற்று முன்தினம் தொடங்கி ஓப் பாசார் (சயோர் 2) இயக்கத்தை தொடக்கியுள்ளது.
சந்தையில் உணவுப் பொருள்களின் விலை 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று வரை கடுகுக் கீரை, பீன்ஸ், புரேக்கோலி, சிவப்பு மிளகாய் உள்ளிட்ட 131 வகையான பொருள்கள் மீது 43 வர்த்தக மையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாகிட் கூறினார்.
சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபரிகள் மற்றும் விநியோகிப்பாளர்களை உள்ளடக்கிய இந்த சோதனை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
சந்தையில் பொருள்களின் விலையேற்றம் தொடர்பான புகார்களை அமைச்சு ஒரு போதும் அலட்சியப்படுத்தியது கிடையாது எங்களுக்கும் குடும்பம், உற்றார் உறவினர்கள் உள்ளனர். நாங்களும் விலையேற்றத்தின் தாக்கத்தை உணர்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
காய்கறி விற்பனை மூலம் அதிகப்படியான லாபத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை உறுதி செய்வதற்காக இதுவரை 43 வணிகர்களுக்கு தகவல் உறுதி அறிக்கைகளும் 40 வணிகர்களுக்கு எழுத்துப் பூர்வ அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதே சமயம், நாடு முழுவதும் உள்ள 1,500 வணிக மையங்களில் சுமார் 1,000 அமலாக்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொள்வதோடு சந்தையில் காய்கறிகளின் விலையேற்றத்தையும் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.