ஷா ஆலம், நவ 29- சிலாங்கூரில் பசுமை நட்புறவு தொழில்நுட்ப உபகரணங்களை பொருத்துவதற்காக 2022 வரவு செலவுத் திட்டத்தில் ஆறு லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சிலாங்கூர் பசுமை மன்றத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எரிசக்தியை சேமிப்பதற்கு பசுமைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட மேம்பாடு அவசியமாகிறது. அதே சமயம், குடியிருப்பாளர்களுக்கு ஆரோக்கியான சுற்றுச்சூழலையும் ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 கோடி மரங்களை நடும் இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 800,000 வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இது தவிர, பாதிப்பை எதிர்நோக்கியுள்ள காட்டுப்பகுதிகள் குறிப்பாக அத்துமீறல் மற்றும் காட்டுத்தீ காரணமாக கோல லங்காட் பகுதியில் சேதமடைந்த் 500 ஹெக்டர் வனப்பகுதி புனரமைப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.