ஷா ஆலம், டிச 1- சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டுச் சென்று சேர்ப்பதில் டிக் டாக் உள்ளிட்ட ஊடகங்களை மீடியா சிலாங்கூர் பயன்படுத்துகிறது.
யூ டியூப் வாயிலாக டிவி சிலாங்கூர் ஒளிபரப்பும் செய்திகள் முக, இண்ஸ்டாகிராம், டிவிட்டர் வாயிலாகவும் வெளியிட்டப்படுகின்றன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான மீடியா சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏதுவாக வாட்ஸ்ஆப் புலனக் குழுவையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அதிகாரப்பூர்வ ஊடகம் என்ற முறையில் மீடியா சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கிடையிலான இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அதே சமயம் இலக்கவியல் தளத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று மாநில சட்டமன்றத்தில் அவர் இன்று தெரிவித்தார்.
மீடியா சிலாங்கூர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே அணுக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து பலாக்கோங் உறுப்பினர் வோங் சியு கீ எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். வோங் சார்பில் பண்டார் உத்தாமா உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் இக்கேள்வியை எழுப்பினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர்பான செய்திகளை மலாய், ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் மொழி பதிப்புகள் தினசரி வெளியிட்டு வருகின்றன என்று அமிருடின் கூறினார்.