ஷா ஆலம், டிச 6- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு பொதுமக்களுக்கு குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் துணையாக இருந்துள்ளது.
அந்த அமைப்பின் உருவாக்கம் குறித்து சில தரப்பினர் கேள்வியெழுப்பினாலும் மக்களின் நலனைக் காப்பதற்காக அதன் நடவடிக்கைகள் தொடரப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2020 மற்றும் 2021 நமக்கு மிகவும் நெருக்கடியான காலக்கட்டமாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் டீம் சிலாங்கூர் அமைப்பின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.
நாம் எடுத்த முடிவு மிகவும் சரியானது. சமூகத்திற்கு உதவும் வகையில் நமக்கு ஒரு தன்னார்வலர் அமைப்பு தேவைப்படுகிறது. வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மக்களுக்கு தேவைப்படும் உதவியை வழங்குவதற்கு இந்த அமைப்பு நமக்கு துணையாக உள்ளது என்றார் அவர்.
இங்குள்ள மேகாவத்தி மண்டபத்தில் நடைபெற்ற டீம் சிலாங்கூர் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் மைகெட்லிஷ் திட்ட தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் எதிர்கால நலனுக்காக சமூகத்தினர் தன்னார்வலர்களாகவும் மறுமலர்ச்சி முகவர்களாகவும் விளங்குவதை உறுதி செய்யும் பணியிலும் இந்த அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் 50,000 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் டீம் சிலாங்கூர் பேரிடர் காலங்களில் மக்களுக்கு விரைந்து சென்று உதவும் துடிப்புமிக்க அமைப்புகளில் விளங்குகிறது என அவர் கூறினார்.