ஷா ஆலம், டிச. 7 - உணவு உற்பத்தித் திட்டத்திற்கான நிரந்தர பூங்கா உள்ளிட்ட பொருத்தமான விவசாய நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்காக தரிசாக இருக்கும் அரசாங்க நிலங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது. சிலாங்கூரில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலவும் விவசாய நிலங்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆடசிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார். ஆண்டிற்கு 3 கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்பிலான 11 திட்டங்களை 1,300 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயத்துறை , கால்நடைத் துறை மற்றும் மீன்வளத் துறை ஆகியவவை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார். இருப்பினும், மாநிலத்தில் உணவு விநியோகப் பாதுகாப்பு சிக்கலைத் தீர்க்க இது போதாது. எனவே மாநில அரசு சிலாங்கூர் உருமாற்றுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் விளைச்சலை அதிகரிப்பதற்கும் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண முடிவு செய்துள்ளது என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இஷாம் கூறினார். பயன்படுத்தப்படாத அரசாங்க நிலங்களை பொது மக்கள் விவசாய நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து சிஜாங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அகமட் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். இதற்கிடையில், விவசாய உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒன்று முதல் இரண்டு டன் வரையிலான இயற்கை உரங்களைப் பெறுவார்கள் என்று இஷாம் தெரிவித்தார். தங்களின் உற்பத்தி பொருள்கள் மாசுபடாமலிருப்பதை உறுதி செய்ய உயர்தர உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தும்படி விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/10/portal_penyerahan_peralatan_kebunkomuniti_005-960x640.jpg)