பந்திங், டிச11- சிலாங்கூர் மோரிப் டூசுன் டுரியான் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு மீண்டும் மின்சார விநியோகத்தை ஏற்படுத்தும் பணிகளை மந்திரி புசார் அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் செய்து முடித்தார்.
டூசுன் டுரியான் முன்னால் தோட்ட நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் சார்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி வீடு கட்டிக்கொள்ள தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தை வழங்கி விட்ட நிலையில், சைம்டார்பி நிறுவனம் தனது உரிமையை பி.என்பி என்ற மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றி விட்டது.
அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதிய நிர்வாகம் குடிநீர் மற்றும் மின்சார விநியோகங்களை துண்டித்து வந்தது.
பலமுறை தொகுதி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழி தற்காலிக தீர்வுகள் எட்டப்பட்ட போதிலும், இவ்வாண்டு தீபாவளி நெருங்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர்களின் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது குடியிருப்பாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.
அவ்வேளையில் உடனடியாக மின்சார இணைப்பை மீண்டும் ஏற்படுத்த மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முயற்சி மேற்கொண்டும், ஒரு தீர்வு எட்ட முடியாத நிலையில் மந்திரி புசார் மானியத்தில் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகிக்க ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பின் சம்பந்தப்பட்ட பல தரப்புகளுடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக, தொழிலாளர்களின் வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க தெனாக மின்சார நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அதன்படி ஒவ்வொரு வீடும் தங்கள் மின்சார உபயோகிப்புக்க ஏற்ப மின் கட்டணத்தை கணக்கிட தனி மின்சார மீட்டர் பொருத்துவது மற்றும் மின் கம்பம் இணைப்பு வேளைகள் நடந்துக்கொண்டிருப்பதை காண வந்திருந்த டாக்டர் குணராஜை , கோலலங்காட் பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்று தங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஹஸனுல் மற்றும் டாக்டர் குணராஜ்க்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.