ஷா ஆலம், டிச 15- மாநிலத்தில் ஊராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகளில் கார் நிறுத்துமிடக் கட்டணம் ஜனவரி 3 முதல் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) மொபைல் செயலி மூலம் இலக்கவியல் கட்டண முறையை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கும். வாகனமோட்டிகள் அந்த செயலியில் உள்ள மின்-கூப்பனைப் பயன்படுத்த வேண்டும். அதனை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம் என்று எஸ்.எஸ்.பி. முகநூல் வாயிலாக தெரிவித்தது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் சில்லரை காசு செலுத்தும் இயந்திரம் அல்லது தேதி மற்றும் நேரத்தை கீறி காட்சி வைக்கும் கூப்பன்களைப் பயன்படுத்தி கார் நிறுத்துமிடக் கட்டணத்தை செலுத்தும் முறை இனி ஏற்றுக்கொள்ளப்படாது. வாகனமோட்டிகள் தங்கள் கார் பதிவு எண்ணை பதிவு செய்து காரை நிறுத்தி வைக்கும் நேரத்தின் அடிப்படையில் தேவையான தொகையை செலுத்த வேண்டும். இதற்கான கட்டணத்தை கார் நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மின்-கூப்பன் முகவர்கள் மூலமாகவும் பணம் செலுத்தலாம். SSP அடையாளம் மற்றும் மின்-கூப்பன் இங்கே விற்கப்படும் என்ற விளம்பரப் பலகையை காணலாம்.