ஷா ஆலம், டிச 16- அடுத்தாண்டு பள்ளித் தவணை தொடங்கவுள்ளதை முன்னிட்டு சொந்தோசா தொகுதியிலுள்ள நான்கு தமிழ் மற்றும் சீன ஆரம்ப பள்ளிகளுக்கு கோவிட்-19 தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன.
தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, லாடாங் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி மற்றும் ஹின் ஹூவா சீனப் பள்ளி ஆகிய அந்த நான்கு பள்ளிகள் இந்த உபகணங்களைப் பெற்றன.
ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,000 முகக் கவசங்கள், 100 சுயப் பரிசோதனைக் கருவிகள், 100 முகத் தடுப்பு கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக கோவிட்-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பள்ளிகள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கவும் இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கோவிட்-19 தடுப்பு உபகரணங்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறிய அவர், இதன் வழி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றார்.