ஷா ஆலம், டிச 18- திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருவோருக்கு உதவுவதற்காக அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ள அகதிகளுக்கு அவசரகால உதவிகள் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் நில அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிள்ளான், கோல லங்காட் மற்றும் சிப்பாங்கில் இதுவரை 33 துயர் துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவது மற்றும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்வது போன்ற பணிகளில் அனைத்து அரசு துறைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்று நண்பகல் 12,00 மணி வரை மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 33 துயர் துடைப்பு மையங்களில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 1,521 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு கூறியது.
எனினும், துயர் துடைப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் இன்னும் புதுப்பிக்கப்படாததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்தது.