ஆலம் ஷா , ஜன 6- டெங்கிலில் உள்ள ஈயக் கப்பலை மாநிலத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக மாற்ற சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. 6,000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட அந்த கப்பலின் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய சுற்றுலா மையத்தை உருவாக்கும் திட்டத்தை நனவாக்க முடியும் என்றும் கலாசாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய ஈயக் கப்பல்களில் ஓன்றான இது, இன்னும் செயல்படும் நிலையில் உள்ளது. ஈயலம்பத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கப்பலை தேசிய ஈயச் சுரங்க அருங்காட்சியகமாக மாற்ற விரும்புகிறோம். அதோடு மட்டுமின்றி வரலாற்றுப்பூர்வபொழுது போக்கு மையமாகவும் இது விளங்கும் என்றார் அவர். சிப்பாங் நகராண்மைக் கழகத்துடன் இணைந்து இத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். சிலாங்கூரில் கலாசார உருவாக்கம் எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி யூ டியூப் சிலாங்கூர் டிவி மற்றும் மீடியா சிலாங்கூர் முகநூல் வாயிலாக நேற்று ஒளிபரப்பப்பட்டது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/09/borhan-aman-shah-1-960x640.jpg)