கோலாலம்பூர், ஜன 6- மத்திய அரசின் “பந்துவான் வாங் இசான்“ எனப்படும் வெள்ள உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்துள்ள 49,394 குடும்பங்களில் 79.5 விழுக்காடு அல்லது 39,255 குடும்பங்கள் இன்று நண்பகல் வரை 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இந்த உதவித் திட்டத்திற்கு இன்னும் பதிந்து கொள்ளாதவர்கள் பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய குடும்ப வெள்ள உதவித் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 500 வெள்ளியாக இருந்த உதவித் தொகையை 1,000 வெள்ளியாக உயர்த்தி வழங்குவதும் அதில் அடங்கும்.
இந்த நிதியுதவித் திட்டம் வெள்ளம் ஏற்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த மாதம் மத்தியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் தீபகற்ப மலேசியாவின் பல மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.