ஷா ஆலம், ஜன 6- கிள்ளானில் வெள்ளம் பாதித்த 68 பகுதிகளில் நேற்று வரை துப்புரவுப் பணி 73.5 விழுக்காடு முழுமையாக பூர்த்தியடைந்துள்ளது.
கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் முயற்சியால் இந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.
மேலும் 15 இடங்களில் துப்புரவுப் பணியின் அளவு 90 விழுக்காடாகவும் மூன்று இடங்களில் 20 விழுக்காடாகவும் உள்ளதாக அவர் சொன்னார்.
இம்மாவட்டத்தில் துப்புரவுப் பணிகளும் வெள்ளத்திற்கு பிந்தைய மீட்சிப் பணிகளும் நிர்ணியிக்கப்பட்ட காலத்திற்குள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய கிள்ளான் மாவட்ட அலுவலகம் கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள கம்போங் லொம்போங்கில் உள்ள சமூக மண்டபத்தில் நடைபெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளத்திற்கு பிந்தைய நோய்த் தொற்று தொடர்பான பரிசோதனைகளை கிள்ளான் சுகாதார இலாகா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கிள்ளான் மாவட்டத்திற்கான பேரிடர் செயல்குழுவின் தலைவருமான அவர் சொன்னார்.