ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூருக்கு வெள்ள உதவிகள் வழங்குவதில் தாமதம்- கெஅடிலான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்

ஷா ஆலம், ஜன 8- சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட விவகாரத்தை கெஅடிலான் கட்சி நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்.

இவ்விவகாரம் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் போது எழுப்பப்படும் என்று கெஅடிலான் கட்சியின்  தகவல் பிரிவு இயக்குநர் ஃபஹாமி பாட்சில் கூறினார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட அந்த வெள்ளப் பேரிடரின் போது மத்திய அரசு சிலாங்கூரை தத்தளிக்க விட்டதைப் போல் தோன்றுகிறது என்று அவர் சொன்னார்.

களேபரமான சூழல் ஏற்பட்டதை உணர்ந்தவுடன் மத்திய அரசு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து உதவி வழங்குவதற்கான சாதனங்கள் மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூரின் நிலை முற்றிலும் மாறுபட்டது. இங்கு சில துறைகள் தாமதமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறித்து நான் ஏமாற்றமடைகிறேன். சிலாங்கூர் பொருளாதார சக்தியாக விளங்குகிறது. இம்மாநிலத்திற்கு உதவாது போனால் உற்பத்தி ரீதியாகவும் மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மத்திய அரசு அறிவித்த பி.டபள்யு.ஐ. எனப்படும் கருணை உதவித் தொகை திட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உதவியைப் பெறுவதற்கு ஏதுவாக விண்ணப்ப முறை எளிதாக்கப் பட வேண்டும். அதை விடுத்து அவர்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது என்றார் அவர்.


Pengarang :