செராஸ், ஜன 10- சிலாங்கூரிலுள்ள அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் மார்ச் மாத இறுதிக்குப் பின்னர் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) எனப்படும் விவேக கார் நிறுத்துமிட கட்டண முறை அமல் செய்யப்படவுள்ளதால் காகித வடிவிலான கூப்பன்களின் பயன்பாடு நிறுத்தப்படவுள்ளது.
மார்ச் மாதத்திற்கு பிறகும் நடப்பில் பயன்படுத்தப்படும் கூப்பன்களை மிகுதியாக வைத்திருப்பவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்குச் சென்று அந்த கூப்பன்களுக்கு இணையானத் தொகையை எஸ்.எஸ்.பி. செயலியில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதன் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூப்பன்களுக்கான தொகையை எஸ்.எஸ்.பி. செயலிக்கு மாற்றுவதற்கு பயனீட்டாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இதுவரை எஸ்.எஸ்.பி. எனப்படும் மின்- கூப்பன் முறைக்கு வாகனமோட்டிகளிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. சுரண்டும் முறையிலான பழைய கூப்பன்களை வைத்திருப்பவர்கள் அதனை உடனடியாக முடித்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
காகித வடிவிலான கார் நிறுத்துமிட கூப்பன் பயன்பாட்டை மாநில அரசு மார்ச் மாத இறுதியுடன் நிறுத்தவிருக்கிறது. அதற்கு பதிலாக எஸ்.எஸ்.பி. செயலி வாயிலாக மின்-கூப்பன் முறை அமல் செய்யப்படவுள்ளது. இந்த செயலியை ஏப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளேய் ஸ்டோர் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.