ஷா ஆலம், ஜன 11- இவ்வாண்டில் டியூஷன் ராக்யாட் எனப்படும் மக்கள் கல்வித் திட்டத்தில் ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவத்தில் பயிலும் 60,000 மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐம்பதாயிரம் எஸ்.பி.எம். மாணவர்களையும் 10,000 எஸ்.டி.பி.எம். மாணவர்களையும் இலக்காக கொண்ட இத்திட்டம் இயங்கலை வாயிலாகவும் மாணவர்களின் நேரடி பங்கேற்பின் வழியும் மேற்கொள்ளப்படும் என்று கல்வித் துறைக்கான மாநில நிரந்தர செயல் குழு கூறியது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 10,000 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசியர்கள் மற்றும் மாதிரி பாடத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. மேலும் சுயமாக கற்றுக கொள்ளும் திறன் வாய்ந்த அதே பிரிவைச் சேர்ந்த 20,000 மாணவர்களுக்கு மாதிரி வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன என்று அது தெரிவித்தது.
இது தவிர மேலும் 20,000 மாணவர்கள் இ.பி.டி.ஆர்.எஸ். மை என்ற அகப்பக்கம் வழி நடத்தப்படும் இணைய வகுப்பில் பங்கேற்கின்றனர். இங்கு கற்றல் முறையும் பாட வழிகாட்டிகளும் காணொளி மூலம் வழங்கப்படுகிறது.
ஆறாம் படிவத்தில் பயிலும் 10,000 மாணவர்கள் அடிமட்ட நிலையில் பாடங்களில் ஆற்றல் பெறுவதற்கு ஏதுவாக வழிகாட்டிப் புத்தகங்கள் வழஙகப்படும் என்று அக்குழு சிலாங்கூர் கினியிடம் கூறியது.