கோலாலம்பூர், ஜன 12- இங்குள்ள ஜாலான் துன் இஸ்மாயிலில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கான எஸ்.ஒ.பி. விதிமீறல் தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் முகக் கவசம் அணியாதிருப்பதை சித்தரிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் அடிப்படையில் தாங்கள் இந்த விசாரணையைத் தொடக்கியுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹா யாஹ்யா கூறினார்.
1998 ஆம் ஆண்டு தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் 21ஏ பிரிவு மற்றும் 2021 தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தடுப்பு விதி 16(1)இன் கீழ் இச்சம்வம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சி ஒன்றினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் முகக் கவசம் அணியாதிருப்பது குறித்து அச்சம்பவம் குறித்த படங்களை பகிர்ந்து கொண்ட டிவிட்டர் கணக்கின் உரிமையாளர் கேள்வியெழுப்பிருந்தார்.