கிள்ளான், ஜன 17- அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செந்தோசா தொகுதி மக்களுக்கு 50,000 வெள்ளி செலவில் வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 2,000 பேர் பயன்பெற்ற வேளையில் எஞ்சிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
உதவி நிதி கோரி அதிகமானோரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். இன்னும் உதவி நிதி பெறாதவர்களுக்கு கூடுமானவரை உதவிகளைப் பெற்றுத் தர முயன்று வருகிறோம் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள தேவிஸ்ரீ மகா காளிகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது சிலாங்கூர்கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உணவுக் கூடைகள், அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மெத்தை போன்ற பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வசதி குறைந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 50 பேருக்கு உதவிப் பொருள்களை வழங்கினார்.
செந்தோசா தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பல்வேறு பொருள்களை வழங்கிய அரசு சாரா அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குணராஜ் சொன்னார்
கொடை நெஞ்சர்களிடமிருந்து நாங்கள் அதிகமான உதவிப் பொருள்களைப் பெற்றோம். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பொருள்களை வழங்குவதில் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம் என்றார் அவர்.