ஷா ஆலம், ஜன 17- கிள்ளான் நகரின் பல்வேறு பகுதிகளில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட மற்றும் அந்நிய நாட்டினரால் நடத்தப்பட்ட கடைகளுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.) சீல் வைத்தது.
முறையான வர்த்தக லைசென்ஸ் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு எதிராக பத்து பிலா பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளையில் தாமான் சீ லியோங் மற்றும் ஜாலான் தெராத்தாய் வட்டாரத்தில் காலைச் சந்தையில் வணிகம் செய்து வந்த அந்நிய நாட்டினரின் கடைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.
பாசார் பாகியில் காய்கறிகளை விற்று வந்த அந்நிய நாட்டினர் மீது இச்சோதனையின் போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேஸ்புக் வாயிலாக நகராண்மைக் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட வணிகர்கள் மீது 2007 ஆம் ஆண்டு அங்காடி வியாபார துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வர்த்தக பொருள்களும் மேல்கட்ட நடவடிக்கைகாக அமலாக்க பிரிவு அலுவலக கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.