ஷா ஆலம், ஜன 17– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 450 குடும்பங்களுக்கு டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு இவ்வாரம் உதவிப் பொருள்களை வழங்கவுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசி, உணவுப் பொருள்கள், சுகாதார பராமரிப்பு உபகரணங்கள், சோப்பு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஷியாய்செல் கெமான் கூறினார்.
பத்து தீகா, சுங்கை பீலேக், ஸ்ரீ செர்டாங், டெங்கில், கோத்தா கெமுனிங், ஈஜோக் ஆகிய தொகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பொருள்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் தேவைகேற்ப இப்பொருள்கள் வழங்கப்படுகின்றன. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பொருள்களை நாங்கள் வழங்குவதில்லை என்று சிலாங்கூர் கினியிடம் அவர் சொன்னார்.
கடந்தாண்டு டிசம்பர் மாத மத்தியில் வெள்ளம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை 71 பகுதிகளில் உள்ள சுமார் 3,000 வீடுகளை துப்புரவு செய்யும் பணியில் 1,200 தன்னார்வலர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வது, குடிநீர் வழங்குவது, உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பது ஆகிய பணிகளை இக்குழுவினர் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவும்படி டீம் சிலாங்கூர் உள்ளிட்ட மாநில அரசின் தன்னார்வலர் அமைப்புகளுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.