ஷா ஆலம், ஜன 18- தைப்பூச விழாவைக் கொண்டாடுவதில் இந்துக்கள் கடைபிடிக்கும் தியாக உணர்வை இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காவும் சுபிட்சத்திற்காகவும் அனைத்து தரப்பினரும் தியாகம் புரிய முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த தியாகத்தின் அடையாளத்தை இன மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மக்களும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று தைப்பூச விழாவை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் சொத்துக்களையும் பல உயிர்களையும் பறித்த வெள்ளத்தின் தாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு தைப்பூச விழா கொண்டாடப்படுவதாக அவர் கூறினார்.