கோலாலம்பூர், ஜன 21- கோவிட்-19 நோய்த் தடுப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை பட்டியலில் இருந்து (எஸ்.ஒ.பி.) உடல் வெப்பத்தை சோதனையிடும் முறையை விரைவில் நீக்க சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
பொது இடங்களுக்குச் செல்லும் போது மைசெஜாத்ரா செயலி குறியீட்டை ஸ்கேன் செய்தால் மட்டும் போதுமானது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
அமைச்சர்கள் நிலையிலான அடுத்த கோவிட்-19 கூட்டத்தில் இதன் தொடர்பிலான திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டப் பின்னர் எஸ்.ஒ.பி. விதிகளைத் சீர்ப்படுத்தும் முயற்சிகள் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அதன் பின்னர் உடல் வெப்பத்தை அளவிடும் நடைமுறை கட்டாயமாக்கப்படாது என்றார் அவர்.
நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அமைச்சர் இவ்விபரங்களை வெளியிட்டார்.
இதனிடையே, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 7 நாள் கால கெடு இம்மாதம் 24 ஆம் தேதி முதல் 5 நாட்களாக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.