ஷா ஆலம், ஜன 21- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வெள்ள சீரமைப்புக்கு முக்கியத்துவம் தரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக இப்பகுதி விளங்குவதால் இந்நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வது அவசியமாகிறது என்று கோத்தா ராஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாபு கூறினார்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மையமாக விளங்கும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உயர் வருமானம் பெறுவோர் முதல் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர் வரை வசிப்பதாக அவர் சொன்னார்.
ஆகவே, கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம மக்களின் சினத்தை தணிக்க முடியும் என்பதோடு ஒன்றிணைந்து செயல்டவும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர, வானிலை அறிக்கையை வெளியிடும் நிறுவனமும் இன்னும் கவனமாக செயல்பட வேண்டும். நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் கடுமையான மழை பெய்யும் என அந்த அறிக்கை கூறியது. எனினும் சிலாங்கூர் மாநிலத்தை அது குறிப்பிடவில்லை என்றார் அவர்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய பிறகுதான் இப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்று நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் சொன்னார்.
இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ள விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தவறியதன் மூலம் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் குற்றஞ்சாட்டினார்.