ஷா ஆலம், ஜன 25 - சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்திற்குப் பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணிகள் திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள் மார்ச் இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார். நாங்கள் தற்போது 1.5 மீட்டர் ஆழமுள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணியிலும் தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து திடக்கழிவுகளைஅகற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளோம் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார். தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பணியை ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கினோம். இத்திட்டத்தின் கீழ் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார் அவர். இதற்கிடையில், எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளில் முதல் கட்ட குப்பை அகற்றும் பணிக்கு 1 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாக ரம்லி கூறினார். ஷா ஆலம், உலு லங்காட், சுபாங் ஜெயா, கிள்ளான், கோல லங்காட், சிப்பாங் மற்றும் கோல சிலாங்கூர் ஆகியவையே அந்த அந்த ஊராட்சி மன்றங்களாகும். அடங்கும். "தாமான் ஸ்ரீ மூடா, தாமான் ஸ்ரீ நண்டிங், பாடாங் ஜாவா, மேரு மற்றும் கம்போங் புக்கிட் லாஞ்சோங் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக அனுப்பப்பட்ட இயந்திரங்களுக்கான வாடகைக் கட்டணங்களும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை ஊராட்சி மன்றங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மொத்தம் 78,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.