ஜோகூர் பாரு, பிப் 13- அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் இடைநிலைப் பள்ளிகள் வாக்ககளிப்பு மையங்களாக பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பை கல்வியமைச்சு நாடுகிறது. மார்ச் 2 ஆம் தேதி முதல் 29 வரை ஆம் தேதி வரை நடைபெறும் எஸ்.பி.எம் தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒத்துழைப்பு கோரப்படுவதாக கல்வி மூத்த அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் தமது தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் கடிதம் அனுப்பும் என்று அவர் சொன்னார். வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலின்போது இடைநிலைப் பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்ளாகப் பயன்படுத்தப்படும் என்று ஆசிரியர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. வழக்கமாக இப்பணிக்கு பள்ளிகள் பயன்படுத்தப்படும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றாலும் வாக்குச் சாவடிகளாகப் பள்ளிகளை பயன்படுத்துவது தொடர்பில் தேர்தல் ஆணையத்திடமிருந்து எங்களுக்கு இன்னும் விண்ணப்பம் வரவில்லை என்றார் அவர். மேலும், இடைநிலைப் பள்ளிகளை வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சு நிலையில் நாங்கள் முன்பே முடிவெடுத்துள்ளோம் அவர் மேலும் சொன்னார். இன்று கல்வியாளர்கள் மற்றும் கோத்தா இஸ்கந்தார் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.