ஷா ஆலம், பிப் 14– சிலாங்கூர் அரசின் 2021/2022 பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மானியத் திட்டத்தில் பங்கேற்பதற்கு 128 அமைப்புகளும் சங்கங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பங்கேற்பாளர்கள் ஆக்கத்தன்மையுடன் கூடிய நீடித்த சுற்றுச் சூழல் திட்டங்களை அமல்படுத்துவர் என்று சுற்றுச் சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
கடந்தாண்டு டிசம்பர் 1 தேதி முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில் மொத்தம் 320 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றோம். அவற்றில் 128 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் கவனம் செலுத்தாத காரணத்தால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
தேந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் ஆறுகள் மற்றும் கடற்கரைகளைச் சுத்தம் செய்வது, சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்குகளை நடத்துவது, மரம் நடுவது போன்ற நீடித்த சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களில் பங்கேற்பர் என்றார் அவர்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற 2021/2022 ஆம் ஆண்டிற்கான பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் மானியங்களை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக வெப்பமயம், நீர் மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்சனைகளை களைந்து சற்றுச்சூழலை பாதுகாக்கும் மாநில அரசின் முயற்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.