ஷா ஆலம், மார்ச் 18 – அம்பாங் ஜெயா நகராண்மை கழகப் பகுதியில் உள்ள 118 மலைச் சரிவுகளில் நாற்பத்தெட்டு சரிவுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவற்றைச் சீரமைப்பதற்கு சுமார் 10 கோடி வெள்ளி தேவைப்படுவதாகவும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இக்ராம் எனப்படும் மலேசிய பொதுப்பணிக் கழகம் போன்ற அமைப்புகளின் நிபுணர்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இதற்கான இறுதிச் செலவு அமையும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஊராட்சி மன்றமும் தங்கள் பகுதியில் உள்ள மலைச் சரிவுகளை ஆய்வு செய்து மேலும் சரிசெய்வதற்கு இக்ராமின் ஒத்துழைப்பை நாடியுள்ளது என்று அவர் நேற்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
பழுதுபார்ப்பு பணிகளை முன்கூட்டியே மேற்கொள்வதற்காக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம குத்தகையாளர்களை நியமித்துள்ளது. இதன் மூலம் பாதிப்புகளை விரைந்து தடுத்து விடலாம் என அவர் சொன்னார்.
ஊராட்சி மன்ற நிலையில் மேற்கொள்ளப்படும் குறுகிய காலத் திட்டங்கள் குறித்து கருத்துரைத்த அவர், அதன் ஆக்கத் தன்மையை உறுதி செய்வதற்கான திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன என்றார்.
எடுத்துக்காட்டாக, ஷா ஆலம் ஆலம் மாநகர் மன்றம் ஷா ஆலம் பகுதியில் நகர்ப்புற வடிகால் பெருந்திட்டத்தை திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது பருவநிலை மாற்ற நடவடிக்கைத் திட்டத்திற்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார்.
சுபாங் ஜெயா மாநகர் மன்றமும் தனது பங்கிற்கு 330,000 வெள்ளி மதிப்பீட்டில் 11 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பை நிறுவி, வெள்ளத் தொடர்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
எனவே, உள்ளூர் அதிகாரிகள் எதிர்காலத்தில் வெள்ளத்தைத் தணிக்க பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.