ஷா ஆலம், மார்ச் 19- இவ்வாண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை 32,214 பேர் சிலாங்கூர் அரசின் இலவச இணையத் தரவு சேவையின் வழி பயன்பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஓராண்டு காலத்திற்கு இலவசமாக இணையச் சேவையை வழங்கும் இத்திட்டத்தின் வழி பிளாட்ஸ் எனப்படும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் இணைய வணிகர்கள், யுனிசெல் மற்றும் சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பயன்பெறத் தகுதி பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இது தவிர, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் சிலாங்கூர் அரசின் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் உள்பட 10,000 பேருக்கு இலவச இணைய சேவைக்கான சிம் கார்டுகள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இலவச இணைய தரவு சேவைத் திட்டம் சிலாங்கூரில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கு 70,000 இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகள் வழங்கப்படும் என்று மந்திரி பெசார் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி கூறியிருந்தார்.
இந்த திட்டத்தில் யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தில் கடனுதவி பெற்ற மாணவர்கள், சிலாங்கூர் தொழில் திறன் மேம்பாட்டு மையத்தில் பயில்வோர், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களும் பங்கு பெற்றுள்ளனர்.