ஜோர்ஜ் டவுன், ஏப் 2– அசுத்தமான சூழலில் உணவுத் தயாரிப்புத் பணியில் ஈடுபட்ட காரணத்திற்காக சோயா கடலை சார்ந்த உணவுத் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் மீ தயாரிப்பு தொழிற்சாலை ஆகியவை அமலாக்க அதிகாரிகளால் மூடப்பட்டது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தெகார் 2ஆம் கட்ட நடவடிக்கையின் போது நிர்ணயிக்கப்பட்ட தர விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் அவ்விரு தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிடப்பட்டதாக பினாங்கு சுகாதாரத் துறையின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் அதிகாரி முகமது வாஸிர் காலிட் கூறினார்.
இங்குள்ள ஜாலான் பேராக் மற்றும் பத்து லஞ்சாங்கில் செயல்படும் அவ்விரு தொழிற்சாலைகளுக்கும் சுமார் 12,000 மதிப்பிலான மூன்று குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் அவ்விரு தொழிற்சாலைகளையும் இன்று தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதி வரை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.
பத்து லஞ்சாங்கில் செயல்பட்டு வரும் சோயா தயாரிப்புத் தொழிற்சாலையில் எலியின் கழிவுகளும், கரப்பான் பூச்சிகளும் பாத்திரங்களின் மூடிகளில் பூஞ்சைக் காளான்களும் காணப்பட்டன. அதோடு மட்டுன்றி சோயா கடலை அடங்கிய பாத்திரங்கள் கழிப்றையின் தரையில் வைக்கப்பட்டிருந்தன என்றார் அவர்.