சுபாங் ஜெயா, ஏப்ரல் 5: கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டுவரும் இங்குள்ள பண்டார் புத்ரி பூச்சோங் டவுன் பூங்கா பொழுதுபோக்கு பகுதி பொதுமக்களின் பயனுக்கு முழுமையாக தயாராக உள்ளது.
22 ஆண்டுகள் பழமையான பொழுதுபோக்கு பூங்காவை மேம்படுத்தும் பணிக்கு RM14 லட்சம் செலவாகும் என்றும், அதற்கான செலவை முழுமையாக IOI ப்ரோப்பர்டீஸ் ஏற்கிறது என்றும் உள்ளூர் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
“இந்த 11 ஏக்கர் பொழுதுபோக்கு பூங்கா IOI ப்ரோப்பர்டீஸால் உருவாக்கப் பட்டது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேம்படுத்தப் பட்டது. இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையின் (PKP) கட்டுப்பாடுகள் காரணமாக மேம்படுத்தும் பணி சிறிது நேரம் எடுத்தது.
“குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக்கான தளவாடங்கள் மற்றும் வருகையாளர்கள் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்க உகந்த நடைபாதைகள் போன்ற குடும்ப நடவடிக்கைகளுக்கான பல புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
IOI ப்ராப்பர்டீஸில் உள்ள பகுதியை ஆய்வு செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார். கின்ராரா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஸீ ஹான், பார்வையாளர்கள் தூய்மையைப் பராமரிக்கவும், அப்பகுதியில் சுற்றுச்சூழல் எப்போதும் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்யவும் முடியும் என்று நம்புகிறார்..
“பூச்சோங் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு இது போன்ற பூங்காக்கள் முக்கியம், இது ஒரு பொழுதுபோக்கு பூங்கா மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இடமாகவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.