கோம்பாக், ஏப்ப 10- பிளார்ட்பார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ் 3.0) திட்டத்தில் அதிகளவிலான தொழில் முனைவோர் பங்கேற்பதை உறுதி செய்வதில் ஊராட்சி மன்றங்கள் உரிய பங்கினை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இலக்கவியல் வணிகத் திட்டத்தில் 10,000 தொழில் முனைவோர் பங்கேற்பதை உறுதி செய்ய ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிறு வணிகர்களை இந்த செயலியுடன் இணைக்கும் விவகாரத்தில் ஊராட்சி மன்றங்களுடன் நாங்கள் ஒத்துழைப்பு நல்கி வருகிறோம். ரமலான் சந்தைகள் வாயிலாகவும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
பிளாட்ஸ் என்பது வணிக உருமாற்றத்திற்கான ஒரு தளமாகும். மேலும் அதிகமான தொழில்முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள கம்போங் வீரா டாமாயில் நேற்று நடைபெற்ற சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான நோன்புக் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் ராக்கான் டிஜிட்டல் வாயிலாக பெர்மோடேலான நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தால் அமல்படுத்தப்படும் இந்த பிளாட்ஸ் 3.00 திட்டத்திற்கு உந்து சக்தியாக எம்.பி.ஐ.எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் விளங்குகிறது.