ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

விவசாயத்தை நவீனமயமாக்க வெ.13.6 கோடி செலவில் திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஜூலை 28- கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக மாநில அரசு 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளது.

நெல், தென்னை, செம்பனை, காய்கறி பயிரீடு மற்றும் உபகரணங்கள், விவசாய இடுபொருள் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவை அந்த மேம்பாட்டுத் திட்டங்களில் அடங்கும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த நிதியில் 5 கோடியே 20 லட்சம் வெள்ளிக்கும் மேல் கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களில் உபகரணங்கள் மற்றும் விவசாய இடுபொருள்கள் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

நெல் சாகுபடி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல், இயற்கை உரம் வழங்கப்பட்டதோடு நிலத்தை வளமாக்குவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

வடமேற்கு ஒருங்கிணைந்த விவசாய மேம்பாட்டுத் திட்ட பகுதியில் நெல் விளைச்சல் குறைந்து காணப்பட்டதற்கு அங்குள்ள நிலத்தை வளப்படுத்தும் பணிகள் உரிய பலனைத் தராததே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசுடன் தாங்கள் ஒத்துழைப்பை நல்கி வருவதாகவும் இஷாம் கூறினார். இதன் அடிப்படையில் கடந்த 2021 முதல் காலாண்டு தொடங்கி 2,000 ஹெக்டர் நிலப்பரப்பில் ஸ்மார்ட் எனப்படும் விவசாய பெருந்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :