ECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் நீர் விநியோகத் தடை- முக்கிய இடங்களுக்கு லாரிகள் மூலம் நீர் விநியோகம்

ஷா ஆலம், ஆக 9- சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக உலு சிலாங்கூர் மாவட்டத்தின் 188 பகுதிகளில் இன்று தொடங்கி வரும் 11 ஆம் தேதி வரை நீர் விநியோகத் தடை ஏற்படும்.

இக்காலக்கட்டத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு லாரிகள் மூலம் நீரை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த நீர் விநியோக நடவடிக்கையில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் நல்லடக்கச் சடங்கு நடைபெறும் இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

நீர் சுத்திகரிப்பு மையப் பராமரிப்பு பணிகள் காரணமாக உலு சிலாங்கூர் மாவட்டத்தின் 188 இடங்களில் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை வரும் ஆகஸ்டு 9 ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி 11 ஆம் தேதி பின்னிரவு 1.00 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றுப் பெற்றவுடன் 10 ஆம் தேதி பின்னிரவு 1.00 மணி தொடங்கி நீர் விநியோகம் கட்டமாக பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பின்னிரவு 1.00 மணியளவில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் எனவும் இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தத்தைப் பொறுத்து நீர் விநியோகம் கிடைக்கும் நேரம் மாறுபடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் http://www.airselangor.com எனும் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.


Pengarang :