ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

இரட்டைப் பிள்ளைகளைத் தாக்கி துன்புறுத்திய  தந்தை கைது- கிள்ளானில் சம்பவம்

ஷா ஆலம், செப் 28- இரட்டையர்களான  தனது 11 வயது மகன்களை முகத்திலும் உடலிலும் அறைந்தும் குத்தியும் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் அவர்களின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின்  ரோந்து கார் பிரிவு போலீஸ் குழு கிள்ளான், தாமான் செந்தோசாவிலுள்ள ஒரு வீட்டில்  நேற்று இரவு 7.30 மணியளவில் 44 வயதான அந்த லாரி ஓட்டுநரைக் கைது செய்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ்  தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

ஐந்து குழந்தைகளுக்குத்  தந்தையான அவ்வாடவர் முன்கோபி என்றும் இதற்கு முன்பு அந்த இரட்டைக் குழந்தைகளை அடிக்கடி அடித்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

சந்தேக நபரால் தாக்கப்பட்டதன் விளைவாக  அவ்விருவரின் உடல்களிலும் ஏற்பட்ட பழைய காயங்களின் வடுக்கள் தென்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான மூன்று பழைய குற்றப் பதிவுகள் அந்த சத்தேக நபருக்கு  உள்ளன என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

துன்புறுத்தல் குற்றத்திற்காக  2001 அம் ஆண்டு சிறார் சட்டத்தின்  31(1)(a) பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டது வருவதாகவும்  விசாரணைக்காக அவ்வாடவர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

Pengarang :