கோலாலம்பூர், அக் 2 – இந்தோனேசிய உணவக ஊழியரிடம் 65,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 11,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததாக நம்பப்படும் உள்நாட்டு ஆடவர் மற்றும் இந்தோனேசியப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை பூச்சோங் தாமான செளஜானாவில் உள்ள கடை வீடொன்றில் நிகழ்ந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார். சம்பவ தினத்தன்று மாலை 4.00 மணியளவில் மூன்று கொள்ளையர்கள் அந்த கடைவீட்டினுள் புகுந்து 43 வயதான இந்தோனேசியரைத் தாக்கியுள்ளனர்.
பின்னர், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 65,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 11,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று வான் அஸ்லான் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இரவு 7.39 மணியளவில் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரை போலீசார் நேற்று சுபாங் ஜெயாவில் கைது செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
விசாரணையின் போது, அவ்விரு சந்தேக நபர்களும் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார். இருவரும் கொள்ளையடித்ததாக நம்பப்படும் ரொக்கப் பணத்தில்17,000 வெள்ளித் தொகை மற்றும் சில நகைகளை போலீசார் மீட்டதாக அவர் கூறினார்.