MEDIA STATEMENTNATIONALUncategorized

உணவகத்தில் நாற்காலியிலிருந்து விழுந்து இரண்டு வயது குழந்தை மரணம்

ஷா ஆலம், அக 5- உணவகம் ஒன்றில் சிறார்களுக்கான நாற்காலியிலிருந்து தவறி தரையில் விழுந்த இரண்டு வயது குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது.

இத்துயரச் சம்பவம் ஜோகூர் பாரு, தாமான் சூத்ராவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை 3.00 மணிளவில் நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஃபாரிஷ் அம்மார் அப்துல்லா கூறினார்.

குடும்பத்தினருடன் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் அக்குழந்தை மேசையை காலால் உதைத்ததைத் தொடர்ந்து நாற்காலியுடன் அது பின்னோக்கி விழுந்ததாக அவர் சொன்னார்.

விழுந்த வேகத்தில் அக்குழந்தையின் தலை தரையில் பலமாக மோதியது. சிறிது நேரம் அழுத அக்குழந்தை பின்னர் மூர்ச்சையானது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அக்குழந்தையை அவரின் தந்தை உடனடியாக அருகிலுள்ள தனியார் கிளினிக்கிற்கு கொண்டுச் சென்றதாகவும் உடல் நிலை மோசமாக இருந்த காரணத்தால் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி மருத்துவர் ஆலோசனை கூறியதாகவும் அவர் குறிப்பட்டார்.

இஸ்கந்தார் புத்ரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அக்குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்ப்பட்டது. எனினும் அக்குழந்தை உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்ற அவர் மேலும் கூறினார்.

இச்சம்பவத்தில் குற்றச்செயல் எதுவும் காணப்படவில்லை எனக்  கூறிய அவர், திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :