தங்காக், அக் 5- வீட்டிலிருந்து நேற்று காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர் புக்கிட் கம்பீர், கம்போங் பத்து 18, செங்காங்கில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக வெட்டப்பட்ட குளத்தில் அந்த 17 வயது இளைஞரின் சடலம் மிதந்த நிலையில் கண்டு பிடிக்கப் பட்டதாக புக்கிட் காம்பீர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி ஆணையர் ராபியா அஜிஸ் கூறினார்.
குளத்தில் அந்த இளைஞரின் சடலம் மிதப்பதைக் கண்ட அவரின் குடும்பத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்ததாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சிறப்பு உபகரணத்தைப் பயன்படுத்தி அந்த இளைஞரின் சடலத்தை குளத்திலிருந்து மீட்டனர். மேல் நடவடிக்கைக்காக அச்சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது என்றார் அவர்.
அந்த இளைஞரும் அவரின் சகோதரியும் மாலை 3.30 மணியளவில் அந்த குளத்திற்கு சென்றதாகவும் சகோதரி வீடு திரும்பிய நிலையில் அவ்விளைஞர் வராததை அறிந்து தேடும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர் என்று அவர் சொன்னார்.