ஜாகர்த்தா, அக் 8- சிறார்கள் உள்பட 125 பேரை பலி கொண்ட கிழக்கு
ஜாவாவின் மாலாங், கஞ்ஜுருஹான் கால்பந்தாட்ட அரங்க பேரிடர்
தொடர்பில் இந்தோனேசியாவுக்கு எதிராக ஃபீபா எனப்படும் அனைத்துலக
கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுக்காது என்று அந்நாட்டு அதிபர்
ஜோக்கோ விடோடோ கூறியுள்ளார்.
தமக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ஃபீபா தலைவர் கியானி
இன்ஃபனின்தினோ இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தின்படி இறைவன் அருளால் இந்தோனேசியா
ஃபீபாவின் தடைக்கு உட்படாது என ஜோக்கோவி என அழைக்கப்படும்
ஜோக்கோ விடோடோ அறிக்கை ஒன்றில் சொன்னார்.
ஃபீபா தலைவர் இம்மாதம் அல்லது அடுத்த மாதம் இந்தோனேசியாவுக்கு
வரவுள்ளத் தகவலையும் அதிபர் வெளியிட்டார். தங்கள் நாட்டின் கால்பந்து துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் பணியில் ஃபீபாவும் ஏ.எப்.சி. எனப்படும் ஆசிய கால்பந்து சம்மேளனமும் கூட்டாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போட்டிக்கான அட்டவணை, அரங்க பாதுகாப்பு தரம், பாதுகாப்பு
தொடர்பான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் மற்றும் நிபுணர்கள், கிளப்புகள்,
ஆதரவு கிளப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை அந்த
சீர்திருத்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்.