கோலாலம்பூர், அக் 10- ஜாலான் பண்டானில் உள்ள திடீர் உணவகத்தில் கசிந்த வாயுவை சுவாசித்த இரு உணவக ஊழியர்கள் மற்றும் ஒரு சுகாதார அமைச்சின் அதிகாரி ஆகியோர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.55 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பாண்டான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் மற்றும் ஹெஸ்மாட் எனப்படும் அபாயகர இரசாயனப் பிரிவின் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
அந்த உணவகத்தினுள் மயக்கமடைந்த இரு ஊழியர்களைக் காப்பாற்றச் சென்ற போது அந்த அதிகாரியும் மயக்கமுற்றதாக அவர் தெரிவித்தார்.
மயக்கமடைந்த மூவரும் அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் விசாரணைக்காக அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது என்றார் அவர்.