ஷா ஆலம், நவ 23- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 796 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களை சிலாங்கூர் அரசு தயார் செய்துள்ளது.
இந்த மையங்கள் விசாலமான இடம், சுத்தமான நீர் விநியோகம், மின்சாரம், கழிப்பறை மற்றும் அடிப்படை உதவிப் பொருள்களையும் கொண்டிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்திலுள்ள அனைத்து 11 மாவட்டங்களிலும் சுய தூய்மைப் பெட்டிகள், 10,345 தற்காலிக கூடாரங்கள், 332 நடமாடும் தடுப்புகள் ஆகியவையும் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் குறித்து ஈஜோக் உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
இதனிடையே, வெள்ள உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் முறைகேடு இல்லாமலும் தவறி விடாலும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உதவி பெறுவதை தடுக்கும் வகையிலும் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப் படுகிறது என்று அமிருடின் தெரிவித்தார்.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் செய்யப்பட்ட பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் உதவித் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. வெள்ளத்தின் போது நிவாரண மையத்திற்கு செல்லாதவர்கள் விண்ணப்பத்துடன் போலீஸ் புகாரையும் இணைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.