ஷா ஆலம், நவ 23- சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் (பிங்காஸ்) மற்றும் சிலாங்கூர் பொது காப்புறுதி திட்ட பங்கேற்பாளர்களின் தரவுகள் இ-வாலட் வேவ்பெய் செயலியில் பாதுகாப்பாக உள்ளன.
வேவ்பெய் சென்.பெர்ஹாட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த செயலி பேங்க் நெகாராவினால் கண்காணிக்கப்படுவதோடு பயனீட்டாளர் தரவு மேலாண்மையின் கடுமையான கொள்கைகளுக்கு உட்பட்டும் 2010ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றியும் செயல்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தரவு மையத்தில் ஊடுருவல் நிகழ்வதை தடுப்பதற்காக மின்-பண மீட்பு தரவு மையம் பேங்க் நெகாராவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
திரட்டப்படும் அனைத்து தரவுகளும் பங்கு உரிமையாளர் என்ற முறையில் மாநில அரசுக்கு சொந்தமானதாக உள்ளதோடு அந்த தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேங்க் நெகாரா நிர்ணயித்துள்ள விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசினால் பயன்படுத்தப்படும் வேவ்பெய் பண பட்டுவாடா முறையில் உள்ள தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு குறித்து ஜூய்ரியா கேள்வியெழுப்பியிருந்தார்.