புத்ராஜெயா, நவ 29– பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது தலைமையிலான அரசின் கொள்முதல்களுக்கு இனி டெண்டர் இல்லாமல் அனுமதி வழங்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் துறை ஊழியர்களுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அன்வார், தனது தலைமையிலான அரசு தொடர்ந்து கசிவு மற்றும் ஊழலை அனுமதிக்க முடியாது என்றார்.
“இனி டெண்டர் இல்லாமல் கொள்முதல் ஒப்புதல்கள் இருக்க முடியாது.
“எனவே, உங்கள் அனைவரையும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுமாறு நான் அழைக்க விரும்புகிறேன். நாட்டை காப்பாற்ற உறுதி ஏற்போம்,” என்றார்.
அவர் நிதியமைச்சகத்தின் பொறுப்பில் இருந்தபோது, தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களோ அரசு தொடர்பான திட்டங்களில் ஆர்வம் காட்டக்கூடாது என்று அறிவுறுத்தியதாக பிரதமர் கூறினார்.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற அன்வார், முந்தைய அரசாங்கத்தின் பிரச்சினைகளை “தோண்டி எடுப்பதில்” ஆர்வம் காட்டவில்லை, ஆனால் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
“பொதுவாக, மக்களின் வாழ்க்கை சில நாடுகளைப் போல மோசமாக இல்லை, ஆனால் அவர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளனர்.
“எனக்கு பழைய கதைகளைத் தோண்டி எடுப்பதில் ஆர்வம் இல்லை. எதிர்காலம் முக்கியமானது, எதிர்காலத்திற்காக நம்மை தயார் படுத்துவதில் நாம் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி, அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.