ஷா ஆலம், டிச 4- அதிகமானோர் பங்கேற்று பயனடைவதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசின் புளுபிரிண்ட் ஏழ்மை ஒழிப்பு பெருந்திட்டம் இவ்வாண்டில் தரம் உயர்த்தப் பட்டதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையின் அளவு 10,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான வருமான வரம்பு 3,000 வெள்ளியாக விரிவாக்கப்பட்டது ஆகியவை தரம் உயர்த்தபட்ட அம்சங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இதுதவிர இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள உதவித் திட்டங்களை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வரும் அதே வேளையில் பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சின்னம் வரையும் போட்டியையும் அண்மையில் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில மக்கள் மத்தியில் இத்திட்டத்தை பிரபலப்படுத்துவதற்கு ஏதுவாக அடுத்தாண்டில் தாங்கள் மேலும் பல திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் பயன் பெற்றவர்களில் சிலர் மாதம் 20,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டுவதைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களில் சில புதிய கிளைகளைத் திறந்து அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதோடு தொழிற்சாலைகளையும் தொடக்கியுள்ளனர் என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் தொழில்முனைவோர் பேரணியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று தொடங்கி இரு தினங்களுக்கு இங்குள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்வை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தொடக்கி வைத்தார்.